மதம் கடந்த காதல்.. இரு வீட்டிற்கு தீ வைத்த மர்ம கும்பல்.. டுவிஸ்ட் வைத்த வீடியோ.. ஆக்ராவில் பரபரப்பு..!
காணாமல் போன பெண்ணின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல் துறையினர் தேடுதல் வேட்டைய தொடங்கினர்.
உத்திர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் மர்ம கும்பல் ஒன்று இரு வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தரம் ஜக்ரன் சமன்வே சங் அமைப்பை சேர்ந்த மர்ம நபர்கள் ஆக்ராவின் ருனக்தா பகுதியில் வசித்து வந்த சஜித் என்ற நபரின் குடும்பத்தாருக்கு சொந்தமான இரு வீடுகளுக்கு தீ வைத்தனர். அருகருகே அமைந்து இருந்த நிலையில், இரு வீடுகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இரு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட பின் தரம் ஜக்ரன் சமன்வே சங் அமைப்பினர் மிரட்டியதை அடுத்து அருகில் உள்ள உள்ளூர் கடைகள் உடனடியாக மூடப்பட்டன. பெண் ஒருவரை சஜித் கடத்தி சென்றதை அடுத்து, அவரை கைது செய்ய தரம் ஜக்ரன் சமன்வே சங் அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
பெண் மீட்பு:
"குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய போலீஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அந்த அதிகாரி மீது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. விசாரணையில் காவல் அதிகாரி பணி செய்ய தவறியது கண்டறியப்படால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என ஆக்ரா மூத்த எஸ்.ஐ. சுதீர் குமார் சிங் தெரிவித்து இருக்கிறார்.
கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் கடந்த திங்கள் கிழமை மாயமாகி போனார். இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின் அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். எனினும், சஜித் எங்கு இருக்கிறார் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. காணாமல் போன பெண்ணின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல் துறையினர் தேடுதல் வேட்டைய தொடங்கினர்.
டுவிஸ்ட் வைத்த வீடியோ:
இதுகுறித்து வெளியான வீடியோவில் காணாமல் போன பெண், "தான் வாக்குரிமை பெற்றவர் என்றும், சொந்த விருப்பத்தின் பேரில் தான் அந்த நபருடன் சென்றேன்," என கூறுகிறார். "இருவரும் வாக்குரிமை பெற்றவர்கள் தான். மீட்கப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இந்த வாரம் நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால், ஆஜர்படுத்த முடியவில்லை," என அவர் மேலும் தெரிவித்தார்," என எஸ்.ஐ. சுதீர் சிங் தெரிவித்தார்.
சஜித் வீட்டிற்கு தீ வைத்த தரம் ஜக்ரன் சமன்வே சங் அமைப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர் என எஸ்.ஐ. சுதீர் சிங் தெரிவித்தார். பெண்ணின் குடும்பத்தார் சார்பிலும் சஜித்துக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.