பிளிப் கார்ட்டை கபளீகரம் செய்த வால்மார்ட்….. புறவாசல் வழியாக நுழைந்திருப்பதால் நிம்மதி இழக்கும் சிறு வணிகர்கள்…..
இந்தியாவில் அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களால் சிறு,குறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுதாகவும் அந்நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது வணிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் என்று அழைக்கப்படுகிற இணையவழி வர்த்தகம், சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. இங்கு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 2007-ம் ஆண்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமாக தொடங்கப்பட்ட ‘பிளிப் கார்ட்’ இதில் நல்லதொரு பங்களிப்பை செய்து வந்தது.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்க ஆன்லைன் சந்தையில் கொடிகட்டிப் பறக்கிற நிறுவனங்களில் ஒன்றான ‘வால்மார்ட்‘ நிறுவனம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 200 கோடி கொடுத்து வாங்கி, தன் வசப்படுத்துகிறது. இதற்கான பேரம் முடிந்து உள்ளது. இது, உலக அளவில் ஆன்லைன் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே வெளிநாடு நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பதால் இங்குள்ள சில்லறை வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்குள் புறவாசல் வழியாக நுழைவதற்கு வால்மார்ட் விதிமுறைகளை சுற்றி வளைத்து இருக்கிறது, நாட்டு நலன் கருதி இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என கோரிக்கை வடுக்கப்பட்டுள்ளது.
வால்மார்ட்டின் இந்த நடவடிக்கை, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களையும், சிறிய கடைகளையும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதற்கான வாய்ப்புகளையும் ஒழித்துக்கட்டி விடும். ஏற்கனவே பெரும்பாலான சிறிய தொழில் நிறுவனங்கள் இருந்து தாக்குப்பிடிப்பதற்கு போராடி வருகின்றன. வால்மார்ட் நிறுவனத்தின் பிரவேசம், அவற்றுக்கு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என பிரதமருக்கு சமூக அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.
அதே நேரத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வால்மார்ட் நிறுவனத்தின்தலைமை செயல் அதிகாரி டக் மேக்மில்லன், வால்மார்ட் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைப்பதன் மூலம், இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
மேலும் வால்மார்ட் நிறுவனம் 90 சதவீதத்துக்கும் மேலான பொருட்களை உள்நாட்டில், உள்ளூரில்தான் வங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.அதுசரி இனி இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களான அமேசானுக்கும், வால்மார்ட்டுக்கும்தான் கடும் போட்டி!!