சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் மார்ச் 13-ந்தேதி முதல் முற்றிலும் நீக்கப்படும், இம்மாதம் 20ந்தேதி முதல் வாரத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது.

ரூபாய் நோட்டு தடை

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதிஅறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.

நாள் ஒன்றுக்கு ஏ.டி.எம்.களில் இருந்து கார்டு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மட்டுமே என்றும், வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம் வரை வங்கியில் எடுக்கலாம் என்ற முதலில் கட்டுப்பாடு இருந்தது.

50 நாட்களுக்கு பின்

பின், 50 நாட்கள் முடிவுக்கு பின், அதாவது டிசம்பரில் இருந்து விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, ஒரு நாளில் ரூ. 4500 ஆகவும், அதன்பின் நாள் ஒன்றுக்கு ஒரு ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 10 ஆயிரம் வரை எடுக்கலாம் என்றும் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், பணப்புழக்கத்தை படிப்படியாக அதிகரிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. வங்கிகளுக்கு தேவையான பணத்தையும், ஏ.டி.எம்.களுக்கு தேவையான பணத்தையும் அளித்து வருகிறது.

கட்டுப்பாடுகள் நீக்கம்

அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 1-ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடுகளை நீக்கியது, நடப்பு கணக்கு வைத்து இருப்போர், கடன்பெற்று இருப்போருக்கு அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கியது. ஆனால், சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கலுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வந்தது.

இந்நிலையில், சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் மார்ச் 13-ந்தேதி முதல் நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் வங்கி, ஏ.டி.எம்.களில் இருந்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வைர எடுக்க கட்டுப்பாடு இருந்து வருகிறது.

இது இம்மாதம் 20-ந்தேதிமுதல், தளர்த்தப்பட்டு, வாரத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்பின், மார்ச் 13-ந்தேதி முதல், சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.

அவர்கள் ஏ.டி.எம்., வங்கியில் இருந்து தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.