Repo rate: rbi repo rate : ரிசர்வ் வங்கி திடீரென ரெப்போ ரேட் விகிதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியதைத் தொடர்ந்து 5 வங்கிகள் வைப்புத் தொகைக்கான வட்டியையும் உயர்த்தியுள்ளன.

ரிசர்வ் வங்கி திடீரென ரெப்போ ரேட் விகிதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியதைத் தொடர்ந்து 5 வங்கிகள் வைப்புத் தொகைக்கான வட்டியையும் உயர்த்தியுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பந்தன் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, ஜனா சிறு நிதிவங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்தியுள்ளன

2020ம் ஆண்டு மார்ச் மாதம் கடனுக்கானவட்டி வீதம் 40 புள்ளிகளைக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது. கொரோனாவில் மக்களின் வாழ்வாதாரம் மோசமடைந்ததால், வட்டிவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது. 

ஆனால், கடந்த 3 மாதங்களாக பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் உச்சட்டக் கட்ட அளவைவிடக் கடந்துவிட்டது. ரிசர்வ் வங்கியின் பணவீக்க அளவை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தவே இலக்கு வைத்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை பணவீக்கம் 6 சதவீத்தைக் கடந்தது. அதிலும் மார்ச் மாதம் ஏறக்குறைய 7 சதவீதத்தை எட்டியது . ஏப்ரல் மாதம் 8 சதவீதத்தை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இதனால், வேறு வழியின்றி வட்டிவீதத்தை ரிசர்வ் வங்கி 40 புள்ளிகள் உயர்த்தியது. இதன்படி 4 சதவீதமாக இருந்த கடனுக்கான வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வங்கிகளுக்கான ரொக்கக் கையிருப்பு விகிதமும் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் உயர்த்தியதால், வங்கியில் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கும் வட்டி வீதம் உயரக்கூடும். அந்த வகையில் 5 வங்கிகள் வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. 

கோடக் மகிந்திரா வங்கி வெளியிட்ட அறிவிப்பில் “ 390 நாட்களுக்கான வைப்புத் தொகைக்கான வட்டி 30 புள்ளிகளும், 23 மாதத்துக்கான வைப்புத் தொகைக்கு 35 புள்ளிகளும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

பந்தன் வங்கி வெளியிட்ட அறிக்கையில் “ ஒரு ஆண்டு முதல் 18 மாதங்கள் வரையிலான வைப்புத் தொகைக்கும் 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்குள் இருக்கும் வைப்புத் தொகைக்கு 50 புள்ளிகள் வட்டி உயர்த்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளதுதவிர பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. ஐசிஐசிஐ வங்கி கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் உயர்த்தி 8.10 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து இனிவரும் நாட்களில் வங்கிகள் வட்டிவீத உயர்வையும், டெபாசிட்களுக்கானவட்டி வீத அதிகரிப்பு குறித்தும் அறிவிக்கலாம்.

அதேசமயம் நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் வராததால் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 8 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆதலால், ஜூன் மாதம் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி மேலும் உயர்த்த வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.