ஜோஹோ நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தனது தனது விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் சாப்ட்வேர் இன்ஜினியராக உச்சம் தொட்ட தமிழக இளைஞர் அப்துல் சலீம் வெற்றிக் கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (Zoho) இப்போது நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சாதாரண காவலாளியாக பணியில் இருந்து இப்போது தனது விடாமுயற்சி, தன்னம்பிக்கை மூலம் சாப்ட்வேர் இன்ஜினியராக உச்சம் தொட்டுள்ளார் தமிழக இளைஞர் அப்துல் அலீம். அவரது வெற்றிக் கதையை பார்ப்போம்.
விடாமுயற்சியால் உயர்ந்த இளைஞர்
அதாவது வேலை தேடும் தளமான லிங்க்ட்இன் (linkedin) இல் பதிவிட்ட அப்துல் அலீம், 2013ம் ம் ஆண்டில் வெறும் ரூ.1,000 உடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதில் ரூ.800 இரயில் டிக்கெட்டுக்காக செலவழித்ததாகவும் கூறியுள்ளார். வேலை கிடைப்பதற்கு முன்பு சுமார் இரண்டு மாதங்கள் வீதிகளில் தங்கியுள்ளதாகவும் அதன்பின்பு ஜோஹோ காவலாளியாக பணியில் சேர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
கண்களில் தீப்பொறி தெரிகிறது
இங்கு இருந்து தான் அப்துல் அலீமின் மொத்த வாழ்க்கையும் மாறியுள்ளது. அதாவது ஜோஹோவில் அவர் 12 மணி நேரம் காவலாளியாக வேலைபார்த்தபோது தான் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ஜோஹோவின் மூத்த ஊழியரான ஷிபு அலெக்சிஸ் என்பவர் 'உன் கண்களில் ஏதோ தீப்பொறி தெரிகிறது' என்று அப்துல் அலீமிடம் உத்வேகத்தை விதைத்துள்ளார்.
பகலில் காவலாளி; மாலையில் படிப்பு
அதாவது ஷிபு அலெக்சிஸ், ''நீ என்ன படித்து இருக்கிறாய்'' என்று கேட்டபோது ''நான் 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். ஆனால் அடிப்படை கணினி தெரியும். ஹெச்டிஎம்எல் குறித்து தனக்கு கொஞ்சம் தெரியும்'' என்று அப்துல் சலீம் கூறியுள்ளார். அவரிடம் ஆர்வம் இருப்பதை அறிந்த ஷிபு அலெக்சிஸ் அவருக்கு வழிகாட்டினார். அதாவது சுமார் 8 மாதங்களுக்கு அலீம்,பகலில் காவலாளி பணியையும், மாலையில் சாப்ட்வேர் தொடர்பான படிப்புகளையும் ஆர்வமுடன் கற்றுள்ளார்.
சாப்ட்வேர் டெவலப்பர் ஆக பணி
இதை அலெக்சிஸ் ஒரு ஜோஹோ மேலாளரிடம் தெரிவித்தார். அப்துல் அலீமின் ஆர்வத்தை புரிந்து கொண்ட மேலாளர், அலிமை நேர்காணலுக்கு அழைத்தார். அந்த இண்டர்வியூவில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் அலீமை சாப்ட்வேர் உருவாக்குநராக (developer) மேலாளர் பணியில் சேர்த்தார். இப்போது ஒரு உயர் பதவியில் அப்துல் அலீம், பணியாற்றி வருகிறார். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த ஒரு இடத்துக்கும் செல்லலாம் என்பதற்கு அலீம், மிகச்சிறந்த உதாரணமாக அமைந்துள்ளார்.
ஜோஹோவுக்கு ஆயிரம் பாராட்டுகள்
இந்த இடத்தில் ஜோஹோ நிறுவனத்தையும் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். கையில் பட்டம் இருந்தால் தான் வேலை என பல்வேறு நிறுவனங்கள் கூறும் நிலையில், ''உன்னிடம் திறமை இருந்தால் போதும். பட்டப்பட்டிப்பு எல்லாம் பின்புதான்'' என்ற அடிப்படையில் அப்துல் சலீமின் வாழ்க்கையை உயர்த்திய ஜோஹோவுக்கும், ஸ்ரீதர் வேம்புவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
