எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து 2,800 ஊழியர்கள் விருப்ப ஓய்வு
பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளில் இருந்து 2,800 ஊழியர்கள் விருப்ப ஓய்வின் மூலம் செல்ல உள்ளனர் என்று எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஐ. வங்கியின் துணை வங்கிகளான ஸ்டேட் பேங் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட்பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங் ஆப் திருவாங்கூர், மகிளா வங்கி ஆகியவை கடந்த 1-ந்தேதி எஸ்.பி.ஐ.உடன் இணைக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில், எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மும்பையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ எஸ்.பி.ஐ. துணை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களில் 12, 500 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில், 2,800 பேர் மட்டுமே தகுதிபெற்றுள்ளனர். இந்த விருப்ப ஓய்வு திட்டம் 5-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கு்ம்.
இந்த திட்டத்தின்படி, ஊழியர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் பணி நிறைவடைந்திருக்க வேண்டும், 55 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இந்த தகுதிகளுடன் வருவோருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படும். 5 துணை வங்கிகளுடன் ஸ்டேட் வங்கி இணைக்கப்பட்டதையடுத்து, ஊழியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து11 பேராக உயர்ந்துள்ளது.
இதில் 69 ஆயிரத்து 191 ஊழியர்கள் துணை வங்கி ஊழியர்கள். வாடிக்கையாளகள் அளவிலும், 37 கோடியாக உயர்ந்துள்ளது. 24 ஆயிரம் வங்கிக்கிளையும், 59 ஆயிரம் ஏ.டி.எம்.களும் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக ரூ.26 லட்சம் கோடி டெபாசிட்களும், ரூ.18.50 லட்சம் கடனும் கொடுக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.