ராயல் என்ஃபீல்ட் தனது 125வது ஆண்டு விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 20 அன்று 'ஒன் ரைடு 2026' என்ற உலகளாவிய பைக் பயணத்தை நடத்துகிறது. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் இந்த நிகழ்வு, பனிச்சிறுத்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் தனது 125வது ஆண்டு விழாவை முன்னிட்டு, உலகம் முழுவதும் பைக்கர்களை ஒன்றிணைக்கும் வகையில் ‘ஒன் ரைடு 2026’ நிகழ்ச்சியை நடத்த உள்ளது. செப்டம்பர் 20 அன்று நடைபெற இருக்கும் இந்த உலகளாவிய பைக் பயணத்தில் 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. ஒரே நாளில் 1,600க்கும் அதிகமான தனித்தனி பயணங்கள் நடைபெற உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் பைக்குகளை விரும்பும் மக்கள் ஒன்றிணைந்து பயணிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு ‘ஒன் ரைடு’ நிகழ்ச்சியின் சிறப்பு, பனிச்சிறுத்தை பாதுகாப்புடன் இது இணைக்கப்பட்டிருப்பதுதான். நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு பைக்கரின் சார்பாகவும் பனிச்சிறுத்தைகள் பாதுகாப்புப் பணிகளுக்கு நிறுவனம் நிதியுதவி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை முதல் மாட்ரிட் வரையிலும், சாவோ பாலோ முதல் சிட்னி வரையிலும் பல்வேறு நகரங்களில் இருந்து ராயல் என்ஃபீல்ட் பைக்கர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருக்கும் பைக்கர்களை ஒரே சமூகமாக இணைப்பதற்கான முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
‘ஒன் ரைடு’ நிகழ்ச்சிக்கு ஏற்கனவே சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 53,000க்கும் மேற்பட்ட பைக்கர்கள் பங்கேற்றதாக ராயல் என்ஃபீல்ட் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 125வது ஆண்டு விழா என்பதால், நிகழ்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. குறிப்பாக பைக் பயணத்தை இயற்கை பாதுகாப்புடன் இணைத்திருப்பது, இந்த ஆண்டு நிகழ்ச்சியை வெறும் கொண்டாட்ட நிகழ்வாக இல்லாமல் ஒரு சமூக நோக்கத்துடன் கூடிய முயற்சியாக மாற்றுகிறது.
இமயமலைப் பகுதிகள் ராயல் என்ஃபீல்டின் பயண கலாச்சாரத்துடன் நீண்ட காலமாக தொடர்புடையவை. இதன் தொடர்ச்சியாக, இமாச்சலப் பிரதேசம், லடாக், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து பனிச்சிறுத்தை பாதுகாப்புப் பணிகளில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் சுமார் 718 பனிச்சிறுத்தைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்புப் பணிகள் ஏற்கனவே 10,500 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிறுவனம் கூறுகிறது.
ராயல் என்ஃபீல்டின் 125 ஆண்டுகால பயணத்தில் இமயமலைக்கு முக்கிய இடம் இருப்பதாக நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் உத்தி பிரிவு தெரிவித்துள்ளது. பைக்கர்களுக்கு இமயமலை ஒரு முக்கியமான பயண இலக்காக இருந்தாலும், பனிச்சிறுத்தைகளுக்கு அதுவே இயற்கையான வாழ்விடமாக உள்ளது என்பதையும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, ‘ஒன் ரைடு 2026’ மூலம் உலகம் முழுவதும் உள்ள பைக்கர்களை ஒன்றிணைத்து, இமயமலை மற்றும் பனிச்சிறுத்தைகள் பாதுகாப்பு குறித்த செய்தியை கொண்டு செல்வதே இந்த ஆண்டு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.


