ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி.. 33வது விளையாட்டு விழா - பங்கேற்று சிறப்பித்த கோவை கமிஷனர்!

Mar 3, 2024, 4:32 PM IST

இன்று கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் 33வது ஆண்டு விளையாட்டு போட்டிகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட கமிஷனர் திரு. வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா அவர்கள் தலைமை தாங்கினார். மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், விளையாட்டு விழாவின் அடையாளமான ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்றனர். 

சிறப்பு விருந்தினர் கமிஷனர் திரு வி.பாலகிருஷ்ணன் அவர்கள் பேசும்போது, உடல் நலமும், மனநலமும் இருந்தால் தான் வாழ்க்கையில் சாதனைகளைச் செய்ய முடியும். கல்லூரி மாணவிகள் உடல் நலத்தைப் பாதுகாப்பது அத்தியாவசியமானது என்றார். உடற்பயிற்சியோடு வாழ்க்கை முறையையும் ஒழுங்குபடுத்துவதால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம் என்று கூறிய அவர், மாணவிகளின் பாதுகாப்புக்காகக் காவல்துறை முன்னெடுத்துள்ள முயற்சிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். 

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டு விழாவில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகப் பங்கேற்ற துறைக்கான பரிசை வணிகவியல் துறை பெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.