மணமகன் வீட்டாரின் எதிர்ப்பு.. காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற காதல் திருமணம் - வாழ்த்திய உறவினர்கள்!

Feb 25, 2024, 8:42 PM IST

கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் பவானி (19). இவர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாற்று துறையில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த தனபால் (25) எம்.இ படித்து விட்டு அரசு தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வரும், இளைஞரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். பவானியின் தாய், தந்தையர் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். 

இந்நிலையில் தாய், தந்தையை இழந்த பவானி, பெரியப்பா பெரியசாமி மற்றும் உறவினர்கள் ஆதரவில் இருக்கிறார். இந்நிலையில் பவானி மற்றும் தனபால் ஆகிய இருவரும் காதலித்து வருவது தனபால் வீட்டுக்கு தெரிந்து, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனபால் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, உறவினர்களுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து, புகார் அளித்துள்ளனர். 

அதனை தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் மாமன்ற உறுப்பினர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தாய், தந்தையை இழந்து உறவினர்கள் ஆதரவில் வளர்ந்து வந்த பவானிக்கு கரூர் மாமன்ற உறுப்பினர் வசுமதி பிரபு படிப்பு உதவி அளித்து வந்த நிலையில், தற்போது திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் உள்ளிட்ட செலவுகளையும் ஏற்றுக் கொண்டு உதவி செய்துள்ளார்.