கார்த்திகைக்காக வீட்டு வாசலில் ஏற்றப்பட்ட விளக்கு; பைக், கார் எரிந்து நாசம்

Nov 27, 2023, 5:44 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருப்பதி காலனியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் தீபன் ராஜ். இவர்  எட்டையாபுரத்தில் தீப்பெட்டி ஆலை வைத்துள்ளார். கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அவரது வீட்டின் வாசலில் தீபம் ஏற்றி வைத்துள்ளனர். தீபம் ஏற்றிய சில நிமிடங்களில் அதிகமாக காற்றாடித்துள்ளது. இதன் பின்னர் ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து நெருப்பு வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார் மற்றும் பைக் மீது பட்டுள்ளது. 

இதனால்  கார் மற்றும் பைக்கில் தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்து தீபன் ராஜ் குடும்பத்தினர் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்கும் வகையில் தடுத்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கார் மற்றும் பைக் முற்றிலுமாக எரிந்து சேதமானது. வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த தீபத்தில் இருந்து தீ பரவி கார் மற்றும் பைக் எரிந்து சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.