2 வயதில் உயிரிழந்த மகளை அம்மன் சிலையாக வடித்து கும்பாபிஷேகம் நடத்திய தந்தை; பொதுமக்கள் நெகிழ்ச்சி

Dec 12, 2023, 12:48 PM IST

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட புள்ளமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன், மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு சபரிவாசன் என்கிற மகனும், சக்தி பிரக்யா என்கிற மகளும் இருந்தனர். இந்த நிலையில் சக்தி பிரக்யாவுக்கு 2 1/2 வயது இருக்கும்போது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவர் அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். செல்லமாக வளர்த்த மகள் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தில் பேரிடியாக அமைந்துள்ளது. அதனால் தாய் தந்தை இருவரும் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து தினந்தோறும் மகளின் நினைவுகளால் தவித்து வந்த தந்தை சௌந்தரபாண்டியன் தங்களது வீட்டு பூஜை அறையில் மகளின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து தினமும் வழிபட்டு வந்துள்ளார். மேலும் மகளின் நினைவு என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் புகைப்படம் மட்டும் போதாது ஆலயம் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக சிறுக சிறுக பணம் சேர்க்கத் தொடங்கி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஆலயம் கட்டும் பணியினை தனது வீட்டிற்கு அருகில் அவர் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் மூன்று வருடமாக நடைபெற்ற ஆலய கட்டுமான பணி நிறைவடைந்து இன்று அதற்கான குடமுழுக்கு விழாவையும் அவர் வெகு விமரிசையாக நடத்தி இருக்கிறார். தனது மகளை அம்மனாக பாவித்து தனது குழந்தை சாயலில் அம்மன் சிலை வைத்து ஸ்ரீ சக்தி பிரக்யா அம்மன் என்கிற பெயரில் கோவில் எழுப்பி  அதற்கு அபிஷேகம், ஆராதனை செய்து குடமுழுக்கு நடத்தி உள்ளார்.

சௌந்தரபாண்டியனின் இந்த செயலை கண்டு வியந்த ஊர் மக்கள் ஒன்று கூடி இந்த ஆலய குடமுழுக்கில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு செய்வது போன்று யாகம் வளர்த்து ஆகம விதிமுறைப் படி அவர் இந்த குடமுழுக்கை நடத்தினார். யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹதி நடைபெற்ற பின்பு புனித குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்ற குடமுழுக்கு நடைபெற்றது.

இது குறித்து சௌந்தரபாண்டியன் கூறுகையில், தனது மகள் உயிருடன் இருந்து அவளுக்கு ஒரு திருமணம் செய்தால் என்ன செலவாகும் என்பதை நினைத்து தான் இதை செய்துள்ளேன். எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். இந்த குழந்தை எனக்கு மட்டுமல்லாமல் இந்த ஊருக்கும் நன்மை செய்யும் என்கிற நோக்கில் இந்த ஆலயத்தை கட்டி உள்ளேன். மேலும் வருடா வருடம் இந்த கோவிலுக்கு திருவிழா எடுத்து வழிபடுவேன் என்று அவர் தெரிவித்தார்.