மன்னார்குடியில் கல்லூரி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டியும், கும்மி அடித்தும் மாணவிகள் அசத்தல்

Jan 14, 2024, 6:52 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர் திருநாளை சிறப்பிக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பல்வகை வேறுபாடுகளை கடந்து மாணவிகள் தாவணி, சேலை அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி கூறும் வகையில் சூரிய பகவானை வழிபட்டு காளை மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளை நினைவு கூறும் வகையில் உறியடித்தல், பல்லாங்குழி, தாயம், பாண்டி, கயிறு இழுத்தல் போட்டிகளில் பங்கேற்று மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முன்னதாக இயற்கை ஆர்வலர் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலுவிற்கு பசுமை நாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் கூடி கும்மியடித்து நாட்டுப்புற பாடல்களை பாடி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டியை மாணவிகள் ஓட்டிச் சென்று கல்லூரியை வளம் வந்தனர். பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.