திருவள்ளூரில் மாமூல் தர மறுத்த பார் ஊழியர் மீது கொலை முயற்சி; ஊழியர் படுகாயம்

Mar 21, 2024, 4:43 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி பகுதியில் உள்ள பாரில் அடையாளம் தெரியாத 5 மர்ம நபர்கள் வந்து மது அருந்தியதாகவும், பின்னர் இலவசமாக மது கேட்டும், மாதம் மாமுல் தர வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு பாரில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்நாத் பணம் தர மறுத்ததால் அவரை மது பாட்டிலால் அடித்தும், பின்னர் அரிவாளால் வெட்டியும் பாரில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். 

இதனைத் தொடர்ந்து பார் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று மீஞ்சூர் அடுத்த கொக்கு மேடு பகுதியில் பாரில் மாமூல் கேட்டு தகராறு  செய்து பாரில் பணிபுரிந்த ஜெயின் என்பவரை வெட்டி பாரிலிருந்து 20 பாட்டில்களையும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்தவர்கள் குறித்தும் புகார் அளிக்கப்பட்டது. 

மேலும் இது குறித்து மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டும் சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.