பழனியில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

May 3, 2024, 8:50 PM IST

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக உள்ளது. கத்தரி வெயில் நாளை தொடங்கவுள்ள நிலையில், இப்போதே 100 டிகிரியை தாண்டி பல மாவட்டங்களில் வெப்பம் பதிவாகி வருகிறது.

அந்த வகையில், பழனியில் கடந்த சில தினங்களாக கோடையின் வெப்பம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.  பெரும்பாலானோர் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பழனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களான ஆயக்குடி, நெய்க்காரபட்டி,  பாலமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய  மழை பெய்தது. அரை மணிநேரம் பெய்த  மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.