அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது கனவில் மட்டுமே நடக்கும் - ஜெ.தீபா பரபரப்பு பேச்சு

Feb 14, 2024, 3:48 PM IST

பழனி முருகன் கோயிலுக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனர், பொது செயலாளர் ஜெ தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக், கணவர் மாதவன் ஆகியோர் தங்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்க வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, தான் அரசியலில் இருந்து விலகி வெகு காலம் ஆகிவிட்டது. 

தற்போது நடைபெறும் அதிமுக அரசியல் விளையாட்டுக்களம் போல உள்ளது. இந்த முறை  40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பது கனவில் தான் நடக்கும். அதிமுக மீண்டும் ஒன்றாக சேர்ந்தாலும் ஒற்றுமையாக இயங்குவார்களா என்பது சந்தேகமே. வெற்றி, தோல்வியை  மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

தமிழக சட்டப்பேரவையை பொருத்தமட்டிலும் ஆளுநர் அவருடைய வேலையை செய்ய வேண்டும். ஆளும் திமுக அரசு அவர்கள் வேலையை செய்ய வேண்டும். ஒருவர் வேலையில் ஒருவர் தலையிடும் போது தான் பிரச்சினை ஏற்படுகிறது. தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது திமுக மேற்கொண்ட  நடவடிக்கைகள் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.