விரட்டியடிக்கும் பிள்ளைகளால் தெரு தெருவாய் பிச்சை எடுக்கும் பெற்றோர்கள்…!

By vinoth kumarFirst Published Dec 27, 2018, 4:50 PM IST
Highlights

பிள்ளைகள் கைவிடுவதால், தமிழகம் முழுவதும் கோயில் நகரங்களில், கைவிடப்படும் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அவர்கள் கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் அவலநிலை தொடர்கிறது.

பிள்ளைகள் கைவிடுவதால், தமிழகம் முழுவதும் கோயில் நகரங்களில், கைவிடப்படும் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அவர்கள் கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் அவலநிலை தொடர்கிறது.

சென்னை அருகே திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அப்போது சிலர், தங்களது வயது முதிர்ந்த பெற்றோர் மற்றும் உறவினர்களை தவிக்க விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். அவர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல், பிச்சை எடுக்கும் அவலநிலை தொடர்கிறது. 

தமிழகத்தில் பிச்சைக்காரர்கள் அற்ற மாவட்டமாக மாற்ற, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் அரசு முனைப்பு காட்டியது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பின் அதை அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இவ்வாறு ஏராளமான முதியவர்கள் பிச்சை எடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

இதேபோல், ஆந்திரா உள்ளிட்ட வடடமாநிலங்களில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்களை, அவர்களின் உறவினர்கள் சென்னைக்கு செல்லும் லாரிகளில் ஏற்றி, அதன் டிரைவர்களிடம் பணம் கொடுத்து, நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகளில் இறக்கி விட்டுச் செல்வது அதிகரித்து வருகிறது. இவ்வாறு, விட்டுச் செல்லப்படும் மனநலம் பாதித்தவர்கள், நகரில் கிழிந்த நிலையில், அழுக்கேறிய ஆடைகளுடன் சுற்றித் திரிந்து வருகின்றனர். இதன் எண்ணிக்கை, சில மாதங்களாக அதிகரித்துள்ளது. 

மேலும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர், பச்சிளம் குழந்தைகள் முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளை வைத்து அன்றாடம் பிச்சை எடுப்பதையே தொழிலாக செய்கின்றனர். எனவே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு, மனநல மருத்துவமனைகளில் சேர்க்கவும், தவிக்க விடப்படும் முதியவர்களை மீட்டு காப்பகத்தில் தங்க வைக்கவும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

click me!