கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு.. தொடர்ந்து கள்ளமௌனம் காக்கும் திமுக - விளாசும் பாஜக தலைவர் அண்ணாமலை!

By Ansgar RFirst Published Mar 24, 2024, 8:54 PM IST
Highlights

Annamalai Slams DMK : கோவையில் கோடைகாலம் வரும் முன்னரே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட மமுழு காரணம் திமுக அரசின் திறனற்ற ஆட்சி தான் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லூர் அணை திட்டங்கள். சிறுவாணி தண்ணீர் கோயம்புத்தூரில் குடிநீர் தேவைக்காகவும், பில்லூர் அணையிலிருந்து பெறப்படும் தண்ணீர் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 

சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் கோவையின் 7 நகராட்சிகளுக்கும், 28 ஊராட்சிகளுக்கும் கோவை மாநகராட்சியின் ஒரு பகுதிக்கும் பயன்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் இந்த அணைகளில் நீர்மட்டம் குறைவதும், அதனால் பொதுமக்கள் அவதிப்படுவதும் வாடிக்கையாகி இருக்கிறது. 

"மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது.. அண்ணாமலை வெற்றி பற்றி எனக்கு தெரியாது" - சுப்பிரமணியன் சாமி பேட்டி!

இந்த ஆண்டும் சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் நீர்மட்டம் குறைந்து இருப்பதால் கோயம்புத்தூர் பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எந்தவித தொலைநோக்கு சிந்தனையும் இல்லாத திமுக அரசு, குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாததால், இந்த ஆண்டும் குடிநீர் பஞ்சம் தொடர்கின்றது. 

சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 50 அடி, நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 18.10 அடியாக மட்டுமே உள்ளது. அதேபோல பில்லூர் அணையின் நீர்த்தேக்க உயரம் 100 அடியாகும், நேற்றைய நிலவரப்படி 62.5 அடி உயர நீர்மட்டம் மட்டுமே உள்ளது. பில்லூர் 1,2,3 திட்டங்களுக்கு தினமும் 40 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

கேரள மாநிலம் முத்துக்குளம் என்ற பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. அங்கிருந்து பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. இங்கிருந்து தான் அத்திக்கடவு மற்றும் பவானி சாகர் அணை வரை தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திமுகவின் கூட்டணி கட்சியான "கேரளா மாநில கம்யூனிஸ்ட் கட்சி", கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே நெல்லிப்பதி என்ற இடத்தில் விதிகளை மீறி சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய செய்தி வெளியானது. 

சுமார் 90% தடுப்பணை பணிகள் முடிவடைந்ததும் மேலும் இரண்டு தடுப்பணைகள் கட்ட கேரள கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதும் தெரியவந்தது. சிறுவாணி ஆற்றின் குறுகி கேரள கம்யூனிஸ்ட் கட்சி கட்டி வரும் தடுப்பணைகளால் கோடைகாலத்தில் பில்லூர் அணைக்கு வரும் நீர்மட்டம் குறையும் என்றும், இதனால் கோயம்புத்தூர் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையும், விவசாயிகளுக்கு பாசன நீர் வரத்தும் குறையும் என்றும் கடந்த ஆண்டு பொதுமக்களும், விவசாய பெருமக்களும் அச்சம் தெரிவித்தும். 

தங்கள் இந்தி கூட்டணி நலனுக்காக இதை குறித்து கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் எதுவும் பேசாமல், தடுப்பணைகள் கட்டும் முடிவை கைவிட வலியுறுத்தாமல், கோயம்புத்தூர் மக்கள் நலனுக்கு விரோதமாக திமுக அரசு செயல்பட்டதன் விளைவு இந்த ஆண்டு கோடை காலம் வரும் முன்னரே கோயம்பத்தூரில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. 

உடனடியாக திமுக அரசு கோயம்புத்தூரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு கட்டியுள்ள தடுப்பணைகளின் தற்போதைய நிலை என்ன என்பதையும் தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தங்கள் இந்தி கூட்டணி கட்சி நலனுக்காக தமிழக மக்கள் நலனை பலி கொடுக்காமல் கேரள கம்யூனிஸ்ட் அரசு மேலும் புதிய தடுப்பணைகள் கட்டாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார் அண்ணாமலை அவர்கள்.

பிரதமர் குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாஜக சார்பில் புகார்

click me!