இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நெங்கநாதசாமி கோவில் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாளன்று, வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய உற்சவமான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது.
சொர்க்க வாசல் திறப்பின் போது பெருமாளுடன் சொர்க்க வாசலை கடந்தால் பிறவி பலனை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனையடுத்து சொர்க்க வாசல் திறப்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக அதிகாலை முதல் பல்வேறு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் பெருமையை உடையதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
சென்னையில் புகழ்பெற்ற திருத்தலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
மேலும் மதுரை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு வைபவத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.