அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு பெண்கள் பலி; மற்றுமொரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை...

First Published Jul 6, 2018, 7:07 AM IST
Highlights
Two women killed in unidentified vehicle collision another woman in Intensive treatment


இராமநாதபுரம்
 
இராமநாதபுரத்தில் குடிநீர் எடுக்க சென்ற பெண்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயத்தோடு சிகிச்சை பெற்று வருகிறார்.

இராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் அருகே உள்ளது ஓடைக்குளம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காஞ்சி மனைவி அங்கம்மாள் (60), செல்வராஜ் மனைவி ராமாயி (45). முருகவேல் மனைவி சண்முகவள்ளி (55). 

இவர்கள் மூவரும் நேற்று அதிகாலையில் குடிநீர் எடுப்பதற்காக தள்ளுவண்டிகளில் குடத்தை எடுத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, கிழக்கால் கண்மாய் கரை அருகே அவர்கள் சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

பலத்த காயமடைந்த ராமாயி, சண்முகவள்ளி ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராமாயி சிகிச்சை பலனின்றி இறந்தார். சண்முகவள்ளிக்கு தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகவள்ளியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். 

இந்தச் சம்பவம் குறித்து வாலிநோக்கம் ஆய்வாளர் (பொறுப்பு) முகமது நசீர், உதவி ஆய்வாளர் பழனி ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

click me!