இன்னும் 15 நாட்களில் டெங்கு பாதிப்பில்லா தமிழகத்தை உருவாக்கி விடுவோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கான சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, அங்கிருக்கும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் 15 நாட்களில் டெங்கு பாதிப்பில்லா தமிழகத்தை உருவாக்கி விடுவோம் என்றும் அவர் உறுதி கூறினார்.
மேலும், நில வேம்பு குடி நீர் குறித்து, சமூக வலைத்தளங்களில் பலர் வதந்தி பரப்புகிறார்கள் என்றும், இவ்வாறு வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பல இடங்களில், டெங்கு காய்ச்சல் இல்லாமலேயே, டெங்கு பரிசோதனை என்ற பெயரில், தனியார் மையங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக புகார்கள் வந்துள்ளன என்றும், அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய விஜயபாஸ்கர், டெங்கு இல்லா தமிழகத்தை ஏற்படுத்தி விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.