கே.ஜி.எஃப் போன்ற படங்கள் தமிழ்நாட்டில் வெற்றிபெறுகிறது ஆனால் நடிகர் விஜயின் படம் உள்ளிட்ட தமிழ் படங்களை கர்நாடகாவில் வெளியிட மறுப்பு தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆதினம் ஏன் அரசியல் பேசக்கூடாது
மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் ஆவணப்படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். இதனை தொடர்ந்து பேசிய சீமான், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர் சட்டம் ஒழுங்கு யார் கையில் வைத்திருக்கிறார்கள் அவரிடம் தான் அந்த கேள்வி கேட்கவேண்டும் அவரே சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார் என தெரிவித்தார். 20 நாட்களில் 18 கொலை நடந்து இருக்கிறது என்று சொன்னால் சென்னை கமிஷ்னர் வந்து சொல்கிறார் 10 கொலை தான் நடந்துள்ளது என்று ஒரு கொலை நடந்தாலும் அது கொலை தான் என்றும் விமர்சித்தார்.மதுரை ஆதீனம் அரசியல் பேசக்கூடாது என்று யார் சொல்கிறது , அவரும் வரிசையில் நின்று வாக்களிக்கிறார் அவர் அரசியல் பேசுவது என்ன தப்பு என கேள்வி எழுப்பினார். மதுரை ஆதினம் ஒரு தமிழ் தேசியவாதி என்றும் கூறினார். தமிழகத்தில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று தங்களை அடையாளப்படுத்த பலர் விரும்புகிறார்கள் அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் மேலும் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்க விரும்பவில்லை முதன்மையாக இருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்.
விஜய் படம் வெளியிட மறுப்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது வைக்கின்ற ஊழல் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்கிறோம், ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த அதிமுகவின் ஊழல் பட்டியலை ஏன் அண்ணாமலை வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் நடிகர் விஜய் போன்ற நடிகர்கள் நடித்த படங்கள் கர்நாடகாவில் வெளியிட விடுவதில்லை , கே ஜி எஃப் போன்ற படங்கள் தமிழ்நாட்டில் வெற்றிபெறுகிறது , வெளிநாட்டுப் படங்கள் அனைத்தும் இந்தியாவில் வெற்றி பெறும்போது தமிழ் படங்களை கர்நாடகாவின் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது என தெரிவித்தார். ஒரு வார்டு உறுப்பினரை வாக்களித்து தேர்வு செய்யும் பொழுது நாட்டின் முதல் குடிமகனை மக்கள் வாக்களிக்காமல் தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் சீமான் விமர்சனம் செய்தார்.