சென்னை – மதுரை இடையே 6½ மணி நேரத்தில் செல்லும் அதிவேக தேஜஸ் ரயில் …. 19 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி !!

By Selvanayagam PFirst Published Feb 8, 2019, 10:10 AM IST
Highlights

சென்னையில் இருற்து மதுரைக்கு 61/2  மணி நேரத்தில்  செல்லும் அதிவேக தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி  வரும் 19 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ‘தேஜஸ்’ 2-வது ரக ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டது.
இந்த பெட்டியில், ‘வை-பை’, கண்காணிப்பு கேமரா, தீ மற்றும் புகை கண்டுபிடிக்கும் கருவி, ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன. 

விமானத்தில் இருப்பது போன்று அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய 23 ‘தேஜஸ்’ ரக ரெயில் பெட்டிகளை ஐ.சி.எப். தயாரித்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயில் சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தியாவில் முதல் முறையாக ‘தேஜஸ்’ 2-வது ரக பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும் இந்த ரெயிலை வரும் 19-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இதனிடையே  இந்த ரெயிலுக்கான அட்டவணையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில்  இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு மதுரை சென்றடையும். பின்னர் மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் திருச்சி மற்றும் கொடை ரோடு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

‘தேஜஸ்’ ரெயில் வியாழக்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களில் இயக்கப்படும். இந்த ரெயிலில் 12 இருக்கை வசதி கொண்ட ஏ.சி.பெட்டிகளும், 2 இருக்கை வசதி கொண்ட முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளும், 1 ஜெனரேட்டர் பெட்டி உட்பட 15 பெட்டிகள் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரெயில்வேயில் இதுவரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலே வேகமான ரெயிலாக கருதப்படுகிறது. இந்த ரெயில் மதுரை-சென்னை இடையே 7 மணி நேரம் 40 நிமிடங்களில் பயணிக்கிறது. இந்தநிலையில் ‘தேஜஸ்’ ரெயில் 6½ மணி நேரத்தில் மதுரை செல்வதால், தெற்கு ரெயில்வேயின் அதிவேக ரெயிலாக ‘தேஜஸ்’ ரெயில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!