தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று முதல் வரும் 29-ம் தேதி மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வெப்ப சலனம் காரணமாக 25.05.2023 முதல் 28.05.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29.05.2023 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இதையும் படிங்க : CBSE, ICSE என எந்த பள்ளியாக இருந்தாலும் இனி தமிழ் கட்டாயம்.. தமிழக அரசின் இந்த சட்டம் பற்றி தெரியுமா?
மீனவர்களுக்கான எச்சரிக்கை : தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குமரியில் சொகுசுப் படகு சவாரி ஆரம்பம்! படகு இல்லத்திலிருந்து வட்டக்கோட்டை வரை இயக்கம்!