
திமுக செயற்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தலில் ஏற்பட்ட தோல்வி நிரந்தரமானது அல்ல என்றும், கட்சியின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கான காலமாக இதை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். தோல்விக்கான காரணங்களில் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், முழுமையான சுயபரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், பொறுப்புகளுக்கு வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், புதுமுகங்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படும் என்றும், விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். உறுப்பினர் சேர்க்கைக்குப் பிறகு அனைத்து மட்டங்களிலும் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படும் என்றும், தகுதியான புதிய நிர்வாகிகள் உருவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஒரு மாவட்டச் செயலாளர் அல்லது ஒரு எம்.எல்.ஏ. மட்டும் கட்சியை வலுப்படுத்த முடியாது என்றும், ஒவ்வொரு தொண்டரும் நிர்வாகியாக செயல்பட்டால்தான் இயக்கம் வளர முடியும் என்றும் அவர் கூறினார். வெற்றி, தோல்வி திமுகவின் அரசியல் பயணத்தை தீர்மானிக்காது என்றும், தேர்தலில் தோற்றாலும் எதிர்க்கட்சியாக சுணங்காமல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த தேர்தலில் வாக்களிக்காத மக்களுக்கும் நல்லாட்சி வழங்கியதைப் போல, தற்போது திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்காகவும் போராடுவோம் என்றார். கட்சியினர் முதலில் தங்கள் குடும்பம், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் கட்சியின் கருத்துகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “Comeback கொடுப்பதில் நாம் Specialist” எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், கழகத்தை மேலும் வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.