ஜூன் 2025ல் 2ம் உலகச் செம்மொழி மாநாடு - முதல்வர் அறிவிப்பு

By Velmurugan sFirst Published Mar 16, 2024, 4:18 PM IST
Highlights

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித்தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தாய் மொழி தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, பண்பாடு, உயர்ந்த சிந்தனை, இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.

தமிழை, உயர் தனிச்செம்மொழி என்று முதன் முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் ஆவார். வளம் பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தது தமிழர்களின் நூற்றாண்டு கனவை நனவாக்கியவர் முத்தமிழறிஞா கலைஞர் அவர்கள். திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுமையாக்குவதும் பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ் பண்பாட்டின் மணிமடுகங்களாகும்.

புதுவை மயான கொள்ளை விழா; 1 கி.மீ. நடந்து சென்று தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழிழ் மொழிபெயர்க்கும் பெரும் பணியினை செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு நடத்தியதும், தாய் மொழியை உயிர்ப்போடும், வனப்போடும் வளர்த்தெடுக்கும் கழக அரசின் முயற்சிகளாகும்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது - அமைச்சர் திட்டவட்டம்

மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி 12ம் நாளினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024ம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோவில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம். 

இன்பத் தமிழ் எங்கள் உயருக்கு நேர் என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சென்னையில் வரும் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 5 நாட்கள் சீரோடும், சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!