ரெட் அலர்ட் வாபஸ் … புயல் இல்ல .. எப்பத்தான் மழை பெய்யும் ? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லுறத கேளுங்க !!

By Selvanayagam PFirst Published Oct 9, 2018, 7:48 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து ரெட் அலர்ட் ல்லாம் விட்டு அது புஸ்வாணம் ஆகிப் போன நிலையில், தமிழகம் முழுவதும் நாளை முதல் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.

அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு அருகே உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் இந்திய வானிலை மையம் ‘ரெட் அலர்ட் அளித்து பின்னர் வாபஸ் பெற்றது.

அரபிக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறி, ஓமன் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. அதேபோல அந்தமான் பகுதியில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியும் ஒடிசா கடற்பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் மழை இருக்குமா என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தமிழகத்தின் வடமாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், நாகை, திரூவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மற்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், சென்னையைப் பொறுத்தவரை நாளை முதல் வறண்ட வானிலையே காணப்படும். சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்புண்டு.

உள்மாவட்டங்களான விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, நெல்லை, கோவை, கொடைக்கானல், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என வேதர்மேன் கூறியுள்ளார்.

அந்தமான் அருகே உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மற்றும் டெல்டா மாவட்டங்களில் காற்று வலுவடைந்து இன்று மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என தெரிவித்துள்ளார்.

அடுத்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இன்னும் சில நாட்கள் காத்திருந்தால்,மீண்டும் பரவலாக மழை பெய்யும் நாட்கள் வரும். அதுவரை வாட்ஸ் அப்பில் வரும் எந்தவிதமான வதந்திகளையும் நம்பி, யாருக்கும் பரப்பி பதற்றத்தை உண்டாக்காதீர்கள் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

click me!