அவதூறு பேச்சு வழக்கில் சவுக்கு சங்கருக்கு புதிய சிக்கல்! குண்டாஸ் வழக்கு போட பிளான்?

By SG BalanFirst Published May 4, 2024, 8:57 PM IST
Highlights

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இந்திய தண்டனை சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் சவுக்கு சங்கருக்கு கடுமையான தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக அமைச்சர்கள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகி இருக்கிறது.

பிரபல யூடியூபரும் ஊகடவியலாளருமான சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றியவர். 2008ஆம் ஆண்டில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகாரில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 'ஊழல் உளவு அரசியல்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

இவர் யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டிகளில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தனியாக சவுக்கு மீடியா என்ற நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். தனது பேட்டிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பற்றி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

பூவால் பலியான கேரள இளம்பெண்! மொபைலில் பேசிக்கொண்டிருந்த போது நடந்த விபரீதம்!

குண்டாஸ் பாயுமா?

இந்நிலையில் பெண் காவலர்கள் பற்றி சவுக்கு சங்கர் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதன் எதிரொலியாக, கோவை சைபர் கிரைம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். சனிக்கிழமை காலை தேனியில் உள்ள தனியார் விடுதியில் அவரை போலீசார் கைது செய்தனர்.

தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக சவுக்கு சங்கர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இந்திய தண்டனை சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் சவுக்கு சங்கருக்கு கடுமையான தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. சவுக்கு சங்கரின் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் சிலரும் இது தொடர்பாக கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

புதிய மண் பானையை பயன்படுத்துவதற்கு முன் இதை எல்லாம் செய்ய வேண்டும்!

புதிய சிக்கல்:

இந்நிலையில், இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால நிவாரணம் கிடைப்பதிலும் சிக்கல் காத்திருக்கிறது. திமுக அரசு மீது காட்டமான விமர்சனங்களை முன்வைப்பதால் சவுக்கு சங்கரை கட்டம் கட்டித் தூக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர் நீதிமன்றத்துக்கு மே 1ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிவாரணம் கோரி மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதால், அந்த வழக்கு உடனடியாக விசாரணைக்கு வராமல் இருக்க பிளான் போடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு அவர் மீது குண்டாஸ் வழக்கும் பதிவுசெய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுக்கு சங்கர் திமுக அரசை விமர்சனம் செய்வதால் தான் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் இதுதான் கதியா என்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால், இந்த வழக்கில் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் மோசடியில் இதுதான் புது ட்ரெண்ட்! உஷாரா இல்லாட்டி பேங்க் அக்கவுண்ட் காலி!

click me!