மதுரை மத்திய சிறையில் போலீசாரை கண்டித்து கைதிகள் ஆடைகளைக் களைந்து நிர்வாணத்துடனும், சாலையில் கற்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா தலைமையில் போலீசார் இன்று பிற்பகலில் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது கைதிகள் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கைதிகளை துன்புறுத்தும் வகையிலும் , மானபங்கப்படுத்தும் வகையிலும் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் போலீசாரை கீழே பிடித்து தள்ளியதாக தெரிகிறது.
இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அந்த இரண்டு கைதிகளையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது சிறையில் இருந்த மற்ற கைதிகள் அந்த இரண்டு பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது .இதையடுத்து கைதிகள் சிறையில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்த சிறைத்துறை டி.ஐ.ஜி பழநி கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்,