
சென்னையில் மின்சார ரயில் சேவை
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒரு இடத்தி்ல் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பல மணி நேரம் ஏற்படுகிறது. எனவே சென்னை மக்களுக்கு பெரும் பயன் உள்ளதாக இருப்பது மின்சார ரயில் திட்டம். அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில் சேவை முக்கியமானது. இந்த நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகளின் காரணமாக மின்சார ரயில்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி- நாளை ரயில்கள் இயங்காது
இதனையடுத்து பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்துகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 09.03.2025 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் இரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு இரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 09.03.2025 அன்று தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக மா.போ.கழகம் இயக்க உள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.