Students Alert : மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000..! விண்ணப்பிப்பது எப்படி..

By Thanalakshmi VFirst Published Jan 24, 2022, 2:27 PM IST
Highlights

9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மத்திய கல்விதுறை சார்பில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கல்வி உதவித் தொகையை பெறுவற்கான என்.எம்.எம்.எஸ் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த தேர்வுக்கு 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வுக்கெனத் தனி பாடத்திட்டம் எதுவுமில்லை. மன திறன் சோதனை (MAT)மற்றும் உதவித்தொகை சார் திறன் சோதனை (SAT) என இரண்டு தாள்களாகத் தேர்வுகள் நடத்தப்படும்இதற்கான தேர்வு மார்ச் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவ- மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும். இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 12-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை http://www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கபட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தொகை ரூ.50-ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வருகிற 27-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘2021-22-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் விவரங்களை அரசு தேர்வுத்துறை இணைய தளத்தில் அறியலாம். இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க, மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது முககவசம் அணிந்து வர வேண்டும். போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!