உயரும் கொரோனா பாதிப்பு..மீண்டும் கார் ஆம்புலன்ஸ் திட்டம்.. நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

By Thanalakshmi VFirst Published Jan 5, 2022, 9:39 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு உள்ளானவர்களுக்கு உடனடி ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
 

நாளுக்கு நாள் இரு மடங்காக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை சமாளிக்க கூடுதல் ஏற்பாடு தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உள்ளானவர்களுக்கு உடனடி ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையில்  42 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கிவைக்க உள்ளார். டெல்டா வகை கொரோனா அதிகமான போது இது போன்ற ஆம்புலன்ஸ் சேவை உதவிகரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்த கார் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட உள்ளன .

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் புதிதாக 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 2,731 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் 2,131 அதிகரித்து 4,862 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 2481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 1489 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 4824 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 38 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிப்புகளும் கட்டுப்பாடுகளும் வெளியானது. அதன்படி, மாநிலம் முழுவதும் நாளை முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது.  

மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால  நலன் மற்றும் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.பயிற்சி நிலையங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!