குரூப் - 2 தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது சோகம்… பேருந்து மோதி காதலனுடன் பைக்கில் சென்ற காதலி பலி !!

By Selvanayagam PFirst Published Nov 12, 2018, 9:26 AM IST
Highlights

சிதம்பரம் அருகே  மோட்டார் பைக் மீது தனியார் பேருந்து  மோதியதில், குரூப்- 2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் உயிரிழந்தார்; படுகாயமடைந்த அவரது காதலன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த கவரப்பட்டு பெரிய தெருவைச் சேர்ந்தவர்  பார்கவி, 22 வயதான பார்கவி  சி.முட்லுாரில் உள்ள ராகவேந்திரா தனியார் கல்லுாரியில் பி.எட்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

அவரும் மேலதிருக்கழிப்பாலையை சேர்ந்த ராஜதுரை என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ராஜதுரை  ஐ.டி.ஐ., படித்துவிட்டு, சிதம்பரத்தில் உள்ள ஸ்டுடியோவில் போட்டோ கிராபராக வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இரு வீட்டாரும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியதையடுத்த பெற்றோர் சம்மதத்துடன், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று காலை, ராகவேந்திரா கல்லுாரியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு எழுத, பார்கவியை ராஜதுரை தனது மோட்டார் பைக்கில் அழைத்து வந்தார்.

பிற்பகல் 3:00 மணிக்கு தேர்வு முடிந்து, ராஜதுரை பைக்கில் பார்கவியை ஊருக்கு அழைத்துச் சென்றார். சிதம்பரம் வி.ஜி.பி., தெரு சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது.இதில், பைக்கிலிருந்து இருவரும் துாக்கி வீசப்பட்டனர். ரோட்டில் விழுந்த பார்கவி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த ராஜதுரை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

.திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலன் கண்ணெதிரில் காதலி பரிதாபமாக உயிரிழந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

click me!