சுட்டெரிக்கும் கோடை வெயில்: மதுரை அரசு மருத்துவமனையில் ஏ.சி.வார்டுகள்!

By Manikanda PrabuFirst Published May 6, 2024, 12:19 PM IST
Highlights

வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனையில் ஏ.சி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன் தினம் முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரிவெயிலும் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மதுரை மாநகர்  பகுதிகளில் 100 டிகிரியை தாண்டியே வெப்பத்தின் அளவு பதிவாகி வருகிறது.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை காரணமாக வெளியில் செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி செல்லும் போது அவர்களுக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும் போது உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றக்குறை ஏற்படுகிறது. 

இதனால் அதிக தாகம், தலை வலி, உடல் சோர்வு, தலை சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம், வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் போது சிலர் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால், அவர்களுக்கு பக்கவாதம், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. எனவே, வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக மருத்துவரை உடனே அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவத்துறை அறிவுறுத்தி வருகிறது. 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 15க்கு தள்ளி வைப்பு: உச்ச நீதிமன்றம்!

அதேசமயம், கத்திரி வெயிலின் தாக்கத்தால் வெப்பம் சார்ந்த நோய்கள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே, அதற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு ஏ.சி. வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 10 படுக்கைகள் கொண்ட ஏ.சி. வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10-க்கும் மேற்பட்ட நர்சுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த வார்டில் வெண்டிலேட்டர் கருவிகளும், ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தனி வார்டுகளில் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு - சர்க்கரை கரைசல் ஆகியவை வழங்கப்படுகிறது.

click me!