TN Urban Local Body Election:சென்னையில் மட்டும் 45 பறக்கும் படைகள்..சூடுப்பிடித்த தேர்தல் களம்..

By Thanalakshmi VFirst Published Jan 27, 2022, 3:04 PM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அதற்கான தேதியை தமிழ்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இந்தத் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார். அதன்படி மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற உள்ளது. 

ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளாட்சித் தேர்தலில் பேரணி, சைக்கிள் பேரணி போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. உள்அரங்கு கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி. உள்அரங்கு பரப்புரை கூட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்தல் பிரச்சாரத்தில் 3 பேர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். 300 பேர் மட்டுமே கலந்துக்கொள்ளும் தேர்தல் பரப்புரைக்கு மட்டுமே அனுமதி. நீதிமன்ற உத்தரவுப்படி 3 பேர் மட்டுமே வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கலாம். தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 31,029 வாக்குசாவடிகள் அமைக்கப்படும்.இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 37 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் 24 மணிநேரமும் வாகன சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.  பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கான ஆவணத்தை சமர்ப்பித்தால் வியாபாரிகளிடம் பணம் திருப்பித்தரப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

click me!