அவதூறாக பேசிய திமுக பிரமுகர்: திருப்பத்தூரில் பெண்கள் சாலை மறியல்!

By Manikanda PrabuFirst Published Jul 23, 2023, 11:38 AM IST
Highlights

திருப்பத்தூர் மாவட்டத்தில் அவதூறாக பேசிய திமுக பிரமுகரை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் பொம்பிகுப்பம் பகுதியில் ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்களை திமுக பிரமுகர்  அவதூறாக பேசியதால் 200க்கும் மேற்பட்ட பெண்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவராக தேன்மொழி வெங்கடேசன் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமு என்பவர் திமுகவை சார்ந்தவர். இவர் திமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளராக உள்ளார். இவர் வீடு பொம்பிகுப்பம் பகுதியில் உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இவரது வீட்டை ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு பழைய அத்திகுப்பம் பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள பெண்களை கீழ்த்தரமான வார்த்தைகளில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. குடிபோதையில் பெண்களை ஆபாச வார்த்தைகளாலும், சாதியை சொல்லி கேவலமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

ஜூலை 29இல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் என திருப்பத்தூர் செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதையடுத்து, திமுக நிர்வாகி சாமு மன்னிப்பு கோரினார். அதை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!