வேலூரில் நோயாளியின் தலையில் இரும்பு நட்டுடன் தையல் போட்ட அரசு மருத்துவர்கள்

By Velmurugan sFirst Published Jun 6, 2023, 4:47 PM IST
Highlights

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநருக்கு அரசு மருத்துவர்கள் தலையில் இரும்பு நட்டுடன் தையல் போட்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45). லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 5 மணியளவில் மரதனூர் அருகே சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் உடனடியாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தலையில் தையல் போடப்பட்ட நிலையில் ரத்தம் வெளியேறுவது மட்டும் நிற்கவில்லை. மேலும் தலையில் கடுமையான வலி இருந்துள்ளது.

நண்பர்கள் ஏமாற்றியதால் விரக்தி; நைட்ரஸ் ஆக்சைடை பயன்படுத்தி தாய், மகன் தற்கொலை

இதனால், மருத்துவ சேவையில் குறைபாடு உள்ளதாகக் கூறி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது தலையில், தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு நட்டு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தையல் பிரிக்கப்பட்டு அந்த இரும்பு நட்டை அகற்றினர். தொற்று காரணமாக அவருக்கு 2 நாள் கழித்தே மீண்டும் அந்த இடத்தில் தையம் போட முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கார்த்திகேயனின் உறவினர்கள் கூறுகையில், விபத்து குறித்து தகவல் அறிந்து நாங்கள் 8 மணியளவில் மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்கப்படவில்லை. 

நாமக்கலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை; கடிதத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை

இதனால் அதிருப்தியடைந்து நாங்கள் கேள்வி எழுப்பவே எங்களை சமாதானப்படுத்துவதற்காக தலையில் ஸ்கேன் ஏதும் எடுக்காமல் தையல் மட்டும் போட்டு சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்தனர். அதனால் தையல் போடப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் வழிவது நிற்காமல் இருந்தது. வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு ஸ்கேன் செய்த பின்னர் தான் எங்களுக்கு என்ன பிரச்சினை என்பதே தெரிய வந்தது. நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்திருந்தால் மருத்துவர்களின் அலட்சியத்தால் கார்த்திகேயன் உயிருக்கே ஆபத்தாக அமைந்திருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

click me!