மலைவாழ் மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கிய பாஜகவினர்; தடுத்து நிறுத்திய திமுகவினரால் பரபரப்பு

By Velmurugan sFirst Published Jul 13, 2023, 12:51 PM IST
Highlights

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலைவாழ் மக்களுக்கு சொந்த செலவில் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்த பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட நெக்னாமலை மலை கிராமத்திற்கு தற்போது வரை எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று மலையின் தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரம் 1200 அடி உயரம் கொண்ட மலை கிராமத்திற்கு சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக மண் சாலை அமைத்துக் கொடுத்தனர். 

ஆட்சி மாற்றத்திற்கு பின் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில்  கல்வி, மருத்துவம், ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட  அடிப்படை  தேவைகளுக்கு அப்பகுதி மக்கள் மலையில் இருந்து வாணியம்பாடி வள்ளிப்பட்டு புருஷோத்தமகுப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 7 கிலோ மீட்டர் நடந்தே  சென்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

மேலும் இரவு நேரங்களில் கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும் அல்லது இறந்தவரின் உடலை கொண்டு சென்றாலோ டோலி கட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை தான் தற்போது வரை நீடிக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பாஜக இளைஞரணி சார்பில் பிரதமர் 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் மலை கிராம மக்களிடம் கொடுத்தபோது அவர்களிடம் அப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். 

கோவையில் புதுமண தம்பதிக்கு தக்காளி, வெங்காயத்தை அன்பளிப்பாக வழங்கிய விவசாயிகள்

அதன் அடிப்படையில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக  இளைஞர்களின் சொந்த பணத்தில் வேன் மூலம் நியாய விலைக் கடை விற்பனையாளர் மற்றும் ஊழியர்களுடன் ரேஷன் பொருட்கள் மேலே கொண்டு சென்று அங்குள்ள மலைகிராம மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கிக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த திமுக வார்டு கவுன்சிலரின் கணவர் ரகு மற்றும் திமுகவினர் ரேஷன் பொருட்கள் வழங்குவதை தடுத்து நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வந்த பாஜக இளைஞரணியினரை அங்கிருந்து விரட்டியுள்ளனர். பின்னர் ரேஷன் பொருட்களை வாங்கினால் அரசு வழங்கும் திட்டங்கள் எதுவும் தங்களுக்கு கிடைக்காது என அப்பகுதி மக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரேஷன் பொருட்கள் வாங்காமல் திரும்பிச் சென்றுள்ளனர்.

குடும்ப பெண்கள் போர்வையில் உலா வரும் நகை திருட்டு கும்பல்; வீடியோ வெளியிட்டு கடை உரிமையாளர் குமுறல்

இது சம்பந்தமாக பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் விவேகானந்தன் அளித்துள்ள பேட்டியில்சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் அப்பகுதி மக்களுக்கு தங்களைப் போன்ற இளைஞர்களின் மூலம் அரசு திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ததை மது போதையில் திமுகவினர் தடுத்து நிறுத்தியதாகவும், சாலை, கல்வி மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் வாழ வேண்டும் என அலட்சியப்படுத்தி ஆட்சி நடத்தி வரும் இதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா  என குற்றம் சாட்டிய அவர் துறை ரீதியாக அப்பகுதி மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க பெறவேண்டும் என கோரிக்கை வைத்தனர் 

click me!