திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா.. நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடக்கம்.!

By vinoth kumarFirst Published Aug 16, 2022, 12:02 PM IST
Highlights

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். எப்போதும் கடலென பெருங்கூட்டம் முருகனின் தரிசனத்துக்காகத் திரளும் புண்ணிய பூமி திருச்செந்தூர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். எப்போதும் கடலென பெருங்கூட்டம் முருகனின் தரிசனத்துக்காகத் திரளும் புண்ணிய பூமி திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் ஆவணி திருவிழா,  மற்றும் மாசித்திருவிழா என இரண்டு பிரமோற்சவத் திருவிழாக்கள் மிக முக்கிய திருவிழாக்களாகும்.

இதையும் படிங்க;- கரணம் அடிக்கும் போது கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக  இந்த இரண்டு திருவிழாக்கள் பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆவணி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெற உள்ளது. 

திருவிழாவை முன்னிட்டு 17-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம், தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

5-ம் திருவிழாவான 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். இரவு 7.30 மணியளவில் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது.

7-ம் திருவிழா 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை நடக்கிறது.

8.45 மணிக்கு வெற்றிவேர் சப்ரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

8-ம் திருவிழா 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது

10-ம் திருவிழா 26-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12-ம் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க;-  முழுவதுமாக அம்மனாக மாறிய அன்னபூரணி.. கையில் சூலம்.. தலையில் கிரீடம்.. பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம்..!

click me!