பணம் இல்லாத ஒரே காரணம்; டிராக்டர் ஓட்டும் பட்டதாரி பெண் - படிப்பை தொடர முடியாத அவலம்

By Velmurugan sFirst Published Jun 30, 2023, 11:55 AM IST
Highlights

படிக்க வேண்டும் என்ற ஆசை, கனவு இருந்தும் பணம் இல்லாத ஒரே காரணத்தால் பட்டதாரி இளம் பெண் மேற்படிப்பை தொடர முடியாமல் டிராக்டர் ஓட்டும் அவல நிலை பலரையும் வருத்தமடையச் செய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அருகே உள்ள மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, வேடியம்மாள் தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஏழுமலை ஓட்டுநராகவும், வேடியம்மாள் விவசாய கூலி தொழில் செய்து வரும் நிலையில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையில்  மகன் ராஜியை பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பும், மகள் கலைச்செல்வியை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கணிதமும் படிக்க வைத்துள்ளனர்.

குடும்ப வறுமை சூழல் காரணமாக மேல்படிப்பை தொடர முடியாத  ராஜி நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வரும் நிலையில் கலைச்செல்வியும் தங்களது குடும்ப வறுமை நிலையை போக்க தானும் தன் அப்பா மற்றும் அண்ணனைப் போல் ஓட்டுநராக பயிற்சி மேற்கொண்டு ஆட்டோ வாங்கி ஓட்டியுள்ளார்.

ஆட்டோ ஓட்டுதலில் போதிய வருமானம் கிடைக்காததால் ஆட்டோ வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு உள்ளார். இதனால் ஆட்டோவை விற்றுவிட்டு டிராக்டர் ஓட்ட பயிற்சி மேற்கொண்ட கலைச்செல்வி துணிச்சலாக விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் ஏர் உழுதல்  உள்ளிட்ட விவசாயப் பணிகளை செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.

தேனியில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

மேலும் ஊக்கத்துடன் நெல் அறுவடை இயந்திரத்தை ஓட்ட பயிற்சி மேற்கொண்டு தற்பொழுது நெல் அறுவடை பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். பட்டதாரியான கலைச்செல்வி, டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திரப் பணிகள் இல்லாத போது கரும்பு வெட்டும் வேலையும் செய்து வருகிறார்.

பல வீடுகளில் பெண்கள் தங்களது அன்றாட பணிகளை செய்ய தயங்கக்கூடிய நிலையில் எல்லா பெண்களுக்கும் முன் உதாரணமாக  தங்களது குடும்ப சூழ்நிலையை மேம்படுத்த எண்ணி ஆண்களுக்கு நிகராக கரும்பு வெட்டுதல், டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக பணியாற்றும் பட்டதாரி பெண்ணான கலைச்செல்வியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

காலாவதியான மாத்திரையை சாப்பிட்ட மாணவி மயக்கம்; தாராபுரத்தில் பரபரப்பு

இது குறித்து பட்டதாரி பெண் கலைச்செல்வி தெரிவிக்கையில், குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பை தொடர முடியாமல் தற்பொழுது பணியாற்றி வருகிறேன். தனக்கு கல்லூரி மேற்படிப்பை தொடர வேண்டும் என்ற ஆசையும், கனவும் உள்ளதாக தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

click me!