Flower show: ஏற்காட்டில் கோடை விழா! - ஏற்காடு போறவங்க இந்த வழிகளை ஃபாலோ செய்யுங்க.. ஈஸியா போகலாம்!

By Dinesh TGFirst Published May 22, 2023, 11:19 AM IST
Highlights

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46 கோடை விழாவையொட்டி வண்ண வண்ண மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது.
 

சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக ஏற்காடு விளங்குகிறது. தற்போது கோடைக்காலத்தையொட்டி, சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் சுற்றுலா பணிகளை மகிழ்விக்கும் வகையில் மே மாதங்களில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, நடப்பாண்டு ஏற்காட்டில் 46வது கோடை விழா நேற்று தொடங்கியது. எட்டு நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வண்ணமயமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

வண்ண வண்ண மலர் கண்காட்சியை, நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும், வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

ஊரக வளர்ச்சித் துறை கால்நடை பராமரிப்பு துறை மீன்வளத்துறை உட்பட 42 துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் பல்துறை விளக்க சாதனை கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முற்றிலும் காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட கண்காட்சியையும் அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டதோடு சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்தும் அதன் பயன்பாடு குறித்து 50 வகையான சிறுதானிய உணவு முறை செயல் விளக்க கண்காட்சியும் அவர்கள் திறந்து வைத்தனர்

எட்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தோட்டக்கலை துறையின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது கோடை விழாவில் முக்கியமாக கருதப்படும் அண்ணா பூங்காவில் கார்நேஷன், ஜெர்பரா, அந்தோரியம், ஹார்ட் ஹீட் உள்ளிட்ட 5 லட்சம் அரியவகையான மலர்களை கொண்டு பொன்னியின் செல்வன், கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம், மேட்டூர் அணை, திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு வகையான உருவங்கள் மலர்களை கொண்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

மேலும் பத்தாயிரம் மலர் தொட்டிகளில் டாலியா, மேரி கோல்ட் ஜீனியா டோர்னியம், சால்வியா உள்ளிட்ட வண்ணமலர்கள் இடம்பெற்றுள்ளன. கோடை விழாவினை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு விதமான போட்டிகளுக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோடை விழா தொடங்கியதையொட்டி காலை முதலே ஏராளமான சுற்றுலா பணிகள் குடும்பத்துடன் ஏற்காட்டிற்கு படையெடுத்துள்ளனர். அண்ணா பூங்காவிலும் திரண்ட சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். ஆங்காங்கே செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளதால் தங்கள் குடும்பத்தோடு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும், ஏரி பூங்கா மான் பூங்காவில் சென்ற சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு இயற்கையின் அழகு ரசிப்பதோடு படகு சவாரி செய்தும் மகிழ்கின்றன்.

இதேபோல லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட காட்சி முனைகள் கிளியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் கோயில், தாவரவியல் பூங்கா, ரோஸ் கார்டன் என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டு வருகிறது.



சேலத்தில் இருந்து அஸ்தம்பட்டி அடிவாரம் வரை மலை பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பயணிகளின் வசதிக்காக, வரும் 28ஆம் தேதி வரை ஏற்காடு பிரதான சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்காடு செல்வதற்கு மட்டும் ஏற்காடு பிரதான சாலை பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்காட்டில் இருந்து கீழே இறங்குவதற்கு ஏற்காடு குப்பனூர் சாலையை பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் எட்டு நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில் தமிழகம் மட்டுமல்லாவது அண்டை மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வசதிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே கழிப்பிட வசதியும் குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படுவதோடு சுற்றுலா பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

click me!