சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய ஓமலூர், சேலம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்

By Velmurugan sFirst Published Jan 31, 2023, 12:36 PM IST
Highlights

ஓமலூரில் இருந்து சேலம் ரயில் நிலையம் வரை அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. முன்னதாக ஓமலூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு பூஜைகள் செய்து, பூசணிக்காய் சுற்றி, ரயில் சக்கரத்தில் எலுமிச்சை கனி வைத்து சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில் நிலையம், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டதாகும். இந்தநிலையில், சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக மேட்டூருக்கு இருவழிப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றது. இதில், ஓமலூரில் இருந்து மேச்சேரி வழியாக மேட்டூர் அணை மார்க்கத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பணி முடிவடைந்து மின் வழித்தடமாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 

குமரியில் சூறை காற்றுடன் கனமழை; 10000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

இதனைத் தொடர்ந்து ஓமலூரில் இருந்து சேலம் ரயில் நிலையம் வரை 12.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிப்பாதை திட்டத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்தது. இந்த பணி தற்போது முழுமையாக நிறைவடைந்து, மின் வழித்தடமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஓமலூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் ரயில் நிலையம் வரை புதிதாக அமைக்கப்பட்ட இருவழி பாதையில் இன்று மதியம் சோதனை ஓட்டம் தொடங்கியது. 

இதனைத் தொடர்ந்து ஓமலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ரயிலுக்கு மாலைகள், வாழைகள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து ரயிலுக்கு பூஜைகள் செய்து, தேங்காய் உடைக்கப்பட்டது. மேலும், ரயில் சக்கரங்களுக்கு எலுமிச்சை கனிகள் வைக்கப்பட்டது. பெங்களூரு  ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய், முதன்மை திட்ட அதிகாரி குப்தா, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கெளதம் ஸ்ரீனிவாஸ் உட்பட  பாதுகாப்பு அதிகாரிகள், ரயில்வே கோட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். 

கோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி, 15 தொழிலாளர்கள் காயம்

இதன் பின்னர் அதிவேக ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. பலத்த ஹாரன் சத்தத்துடன் மெதுவாக இயக்கப்பட்டது. மெதுவாக புறப்பட்ட ரயில், குறிப்பிட்ட தூரம் சென்றதும் அதிவேகமாக சென்று சேலம் ரயில்வே நிலையத்தை அடைந்தது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது ஓமலூர் சேலம் இருவழிப்பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதை பணிகள் மிகவும் பாதுகாப்பு தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதனால், எந்தவித சிறு இடையூறும் இல்லாமல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

click me!