உணவில் மலத்தை அள்ளி வீசிய ஆதிக்க சாதியினர் ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய குடும்பத்தினர்

By Velmurugan sFirst Published May 6, 2023, 10:36 AM IST
Highlights

சேலம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உணவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் மனித கழிவுகளை அள்ளி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த தேவண்ண கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கமலஹாசன் ராதிகா குடும்பத்தார். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனர். அதற்கான வரியையும் 47 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திற்கு செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ராஜரத்தினம், ஆனந்தராஜ், பச்சையம்மா உள்ளிட்ட பலர் ராதிகாவின் குடும்பத்தினர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் என்பதால் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு அச்சுறுத்தல்களையும் இன்னல்களையும் கொடுத்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டிற்கு வந்த ஆதிக்க சாதியை சேர்ந்த நான்கு நபர்கள் குழந்தைகள் உணவு அருந்தி கொண்டிருந்த பொழுது உணவில் மலத்தை அள்ளி வீசியதாகவும், ராதிகா மற்றும் அவரது பாட்டி சுருட்டையம்மாள் இருவரையும் சரமாரியாக தாக்கி ஆடைகளை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கேட்ட பொழுது வீட்டின் அருகே இருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்தும், வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளையும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். இதனால் செய்வது அறியாமல் தவித்த பாதிக்கப்பட்டவர்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து சங்ககிரி காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் முருகனிடம் புகார் தெரிவித்தும், இடத்திற்கு பட்டா வழங்க கோரியும் பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் ஆதிக்க சமூகத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு மற்றும் பட்டா வழங்க சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்பொழுது சேலம் மாவட்டத்தில் உணவில் மலம் கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!