கொரோனா காலத்தில் தேவதை என்றார்கள்; தற்போது தெருவில் நிறுத்திவிட்டார்கள் - செவிலியர்கள் வேதனை

By Velmurugan sFirst Published Jan 1, 2023, 4:53 PM IST
Highlights

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சரி செய்யும் விதமாக பயிற்சி முடித்த செவிலியர்கள் அதிரடியாக பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியில் இருந்து வந்த செவிலியர்களின் பதவிக்காலம் டிச.31 உடன் நிறைவு பெறுவதாகக் கூறி அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு பரிசு வழங்கிய முதல்வர்; அகவிலைப்படி 38% உயர்வு

அரசின் இந்த உத்தரவால் செவிலியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது அவர்கள் கூறுகையில், கொரோனா 3வது அலை காலத்திலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மருத்துவக் கவுன்சிலால் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் பணி செய்து வந்தனர். இதுபோன்ற செவிலியர்கள் தமிழகம் முழுவதும் 2,400க்கும் அதிகமானோர் உள்ளனர். கொரோனா காலத்தில் தேவதைகளாக பாவித்த எங்களை தற்போது அரசு தெருவில் விட்டுள்ளது.

6வது நாளாக உண்ணாவித போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்; குழு அமைக்க முதல்வர் உத்தரவு

தமிழக அரசின் இந்த நடவடிக்கையாளல் நாங்கள் தெருவுக்கு வந்துள்ளோம். இதனால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

click me!