தடுப்பணைக்கு கிடா வெட்டி நூற்றாண்டு விழா கொண்டாடிய கிராம மக்கள்

By Velmurugan sFirst Published Jan 23, 2023, 12:46 PM IST
Highlights

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கை அப்பகுதி மக்கள் தற்போது வரை கொண்டாடி வருவது போல், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஒரு தடுப்பணைக்கு கிராம மக்கள் கிடா வெட்டி சாமி நூற்றாண்டு விழாவை உணர்வுபூர்வமாக கொண்டாடிய ருசிகர சம்பவம் நாகை அருகே நடந்தேறி உள்ளது. 

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள ஆத்தூர் கிராமத்தில் கடுவையாறு ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 1923ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறிய தடுப்பணை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பணையின் காரணமாக அந்த பகுதியைச் சுற்றியுள்ள 38 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். 

காதல் திருமணம் செய்ததற்காக 3 ஆண்டுகள் பேசாத பெற்றோர்; விரக்தில் பெண் தற்கொலை

இந்த நிலையில் நூறாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த சிறிய தடுப்பணைக்கு நன்றி உணர்வோடு இப்பகுதி மக்கள் நூற்றாண்டு விழா எடுத்து வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளனர். முன்னதாக இந்த அணைப்பகுதியில் உள்ள படிக்கட்டுகள் சேதமடைந்து காணப்பட்ட நிலையில் அவற்றை சீரமைத்தனர். அதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் தீயணைப்பு துறையினர் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அணையைச் சுற்றியுள்ள நீர்த்தேக்க பகுதிகளில் சூழ்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகளை கிராம மக்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அகற்றினர்.

சிசிடிவி கேமரா அமைத்து கொடுத்த திமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்

இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள விநாயகர் ஆலயத்தில் கலச நீர் கொண்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தடுப்பணைக்கு தேங்காய், பழம், பூ போன்றவற்றை வைத்து வழிபட்டு கலச நீர் கொண்டு தடுப்பணைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அருகில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் கிடா வெட்டி ஊர் மக்களுக்கு விருந்து வைத்துள்ளனர்.

கிராம மக்கள் அனைவரும் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக தடுப்பணை கரையில் அமர்ந்து உணவருந்தினர். பெண்கள் தங்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதமாக நாட்டுப்புறப் பாடல்களை பாடி, கும்மியடித்து மகிழ்ந்தனர்.

click me!