கோவில் திருவிழாக்களில் பக்தி இல்லை; யார் பலசாலி என்ற போட்டி தான் உள்ளது - நீதிமன்றம் வேதனை

By Velmurugan sFirst Published Jul 22, 2023, 7:34 AM IST
Highlights

தற்போதைய சூழலில் கோவில் திருவிழாக்களில் உண்மையான பக்தில் இல்லை என்று குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்றம் இரு பிரிவினரில் யார் பலசாலி என்ற போக்கு தான் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கோவில் அறங்காவலர் தங்கராசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் “கோவில் திருவிழா நடத்துவதில் இருவேறு பிரிவினர் இடையே பிரச்சினை உள்ளது. வட்டாட்சியர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை” என்று விளக்கம் அளித்தனர்.

“தமிழில் பேசிய மாணவிக்கு அபராதம்” டியூசன் வருவதை நிறுத்தியதால் தனியார் பள்ளி ஆசிரியை அத்துமீறல்?

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்சினை ஏற்படுவது தொடர்பாக தினம் தினம் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. மனதில் நிம்மதி வேண்டும், அமைதி வேண்டும் என்பதற்காக தான் மக்கள் கோவிலுக்கு வருகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட கோவில் திருவிழாக்களில் வன்முறை ஏற்படுவது மிகவும் வருந்தத்தக்கது. கோவில் திருவிழாக்கள் இரு தரப்பில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுகிறது. உண்மையான பக்தி இல்லை.

இதுபோன்ற பிரச்சினைகளால் காவல் துறையினர், வருவாய் துறையினரின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே ருத்ர மகா காளியம்மன் ஆலய விழாவிற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் துறையினருக்கு உத்தரவிட முடியாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருவானைக்காவல் கோவிலில் குவிந்த பக்தர்கள்

மேலும் திருவிழாவை அமைதியாக, பாதுகாப்பாக நடத்தவேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. இதற்கு ஒப்புக்கொண்டால் விழாவை நடத்திக்கொள்ளலாம். ஆனால், திருவிழாவின் போது ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல் துறையினர் தலையிட்டு விழா ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். தேவைப்பட்டால் கோவில் திருவிழாவையும் நிறுத்தலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

click me!