வகுப்பறையில் ஆசிரியர் மாரடைப்பால் மரணம்..! கதறி அழுத மாணவர்கள்..!

By Manikandan S R SFirst Published Nov 8, 2019, 5:20 PM IST
Highlights

நாகை அருகே ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். வயது 57. நாகப்பட்டினம் மாவட்டம், உம்பளசேரியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் தங்கி இருக்கிறார். அங்கிருந்து தினமும் உம்பளச்சேரிக்கு சென்று பணியாற்றி வந்துள்ளார்.

இன்றும் வழக்கம் போல வீட்டில் இருந்து கிளம்பி பள்ளிக்கு சென்றார். காலை இறை வணக்கம் முடிந்த பிறகு வகுப்பிற்கு சென்று அறிவியல் பாடம் நடத்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வலியால் துடித்த அவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். அதைபார்த்து அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் கூச்சல் போட்டுள்ளனர். உடனடியாக பக்கத்து வகுப்பில் இருந்த ஆசிரியர்கள் விரைந்து வந்தனர். மயங்கி கிடந்த ஆசிரியர் ராமதாஸை மீட்ட அவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் ஆசிரியர் ராமதாஸிற்கு சிகிச்சை அளிக்க தொடங்கி இருக்கின்றனர். பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார். உடனடியாக ராமதாஸின் குடும்பத்திற்கும் பள்ளிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மரணடைந்ததை கேட்ட சக ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கதறி அழுதனர். பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே ஆசிரியர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கும் டெங்கு பீதி..! இரண்டு வயது சிறுமி பரிதாப பலி..!

click me!