கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்திய புதுவை மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகையில் மீனவர்கள் கோரிக்கை.
நாகை மாவட்டம் செருதூரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், நேற்று இரவு 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் தோப்புத்துறை அருகே 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் வலை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அதிவேக என்ஜின் கொண்ட விசைப்படகுகள், செருதூர் மீனவர்களின் வலைகளை கிழித்து நாசப்படுத்தியுள்ளனர்.
அடுத்தடுத்து தொடர்ச்சியாக செருதூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், முருகபாண்டி, ஐயப்பன், சித்திரவேல், ராஜசேகர், ரமேஷ், தர்மன் ஆகியோரின் 20க்கும் மேற்பட்ட வலைகள் கிழிக்கப்பட்டதால், கடலில் மீன் பிடிக்க முடியாமல் செருதூர் மீனவர்கள் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை பறிகொடுத்து விட்டு இன்று வேதனையுடன் கரை திரும்பினர்.
ஆசைஆசையாய் காதலனை கரம் பிடித்த ஆசிரியை; 6 மாதத்தில் மர்மமான முறையில் மரணம் - திருச்சியில் பரபரப்பு
தோப்புத்துறை கரையோரம் சிறு தொழிலில் ஈடுபட்ட செருதூர் மீனவர்களின் வலைகளை புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த அதிவேக என்ஜின் கொண்ட விசைப்படகுகள் கிழித்து நாசப்படுத்தி, அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் என்பது அங்குள்ள மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அத்துமீறலில் ஈடுபட்ட காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட செருதூர் மீனவர்கள் நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.