தேர்வு அறையில் செல்போன்.. அசிங்கப்படுத்திய ஆசிரியர்.. 3வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை.!

By vinoth kumarFirst Published Jul 24, 2021, 2:17 PM IST
Highlights

கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் சோனாலி தேர்வு அறையில் செல்போனை வைத்துக்கொண்டு காப்பி அடித்துள்ளார். அப்போது, தேர்வு அறைக்கு வந்த தேர்வு கண்காணிப்பாளர் சோனாலி செல்போன் வைத்திருந்ததை அறிந்து செல்போனை பிடுங்கி கொண்டு அவரை கண்டித்து தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து மருத்துவ கல்லூரி மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் சவீதா மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் அனைத்து வகையான மருத்துவ படிப்புகளை பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், சவீதா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சுகாதார அறிவியல் தொடர்புடைய மருத்துவ படிப்பு படிக்கும் அம்பத்தூர், புதூர் பகுதியை சேர்ந்த சோனாலி (20) என்ற மருத்துவக் கல்லூரி மாணவி பயின்று வருகிறார்.  கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் சோனாலி தேர்வு அறையில் செல்போனை வைத்துக்கொண்டு காப்பி அடித்துள்ளார். அப்போது, தேர்வு அறைக்கு வந்த தேர்வு கண்காணிப்பாளர் சோனாலி செல்போன் வைத்திருந்ததை அறிந்து செல்போனை பிடுங்கி கொண்டு அவரை கண்டித்து தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

பின்னர், தேர்வு எழுதிய 7-வது மாடியில் இருந்து 3-வது மாடிக்கு வந்த சோனாலி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமுற்ற சோனாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சோனாலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!