அத்திவரதருக்காக பணியாற்றிய அத்தனை பேருக்கும் நன்றி !! - முதல்வர் பழனிசாமி உருக்கம் ..

By Asianet TamilFirst Published Aug 17, 2019, 7:37 AM IST
Highlights

காஞ்சிபுரம் அத்திவரதரை ஒரு கோடி பேர் தரிசித்துள்ளதாகவும், அதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் முதல்வர் பழனிசாமி .

கடந்த 48 நாட்களாக அத்திவரதருக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார் . 

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளியுள்ள அருள்மிகு அத்திவரதரின் வைபவம், 1.7.2019 முதல் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று 17.8.2019 அன்றுடன் நிறைவடையவுள்ளது.

தமிழக அரசு, விரிவான பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ முகாம்கள், போக்குவரத்து, அன்னதானம், கர்ப்பிணி பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வழி தரிசனம், உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுத்ததன் காரணமாக, இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அருள்மிகு அத்திவரதரின் தரிசனம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை, மின் துறை, உள்ளிட்ட அனைத்து அரசு துறையினரும், தேசிய மாணவர் படையினரும், தன்னார்வலர்களும், ஒருங்கிணைந்து மிக சிறப்பாக பணியாற்றியதன் விளைவாக, வருகை தந்த பக்தர்கள் அனைவரும் அருள்மிகு அத்திவரதரை சிறப்பாக தரிசித்து சென்றனர்.

குறிப்பாக, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், கோயில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் இரவு பகல் பாராமல் மிகச் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டதன் காரணமாக அருள்மிகு அத்திவரதர் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு அத்திவரதர் வைபவம் நடந்த காலக் கட்டத்தில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள், கண் விழித்து காஞ்சிபுரம் நகரில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களின் பணி மிகவும் மெச்சத்தக்கது. இவர்கள் மேலும் இரண்டு நாட்கள் தங்கி காஞ்சிபுரம் நகரில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

காஞ்சிபுரம் நகரில் வசிக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த 48 நாட்களும், வருகை தந்த பக்தர்களை வரவேற்று உபசரித்தது பாராட்டுக்குரியதாகும். எனது வேண்டுகோளை ஏற்று இந்த வைபவ காலத்தில் அன்னதானத்திற்கு நிதியுதவியும், ஆதரவும் வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அருள்மிகு அத்திவரதர் வைபவத்தினை சிறந்த முறையில் மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும், இச்சமயத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னலம் பாராமல், இரவும், பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறையினருக்கும், குறிப்பாக வருவாய் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

click me!