அனைத்து கலாசாரங்களையும் விட பழமையான பண்பாட்டை கொண்டது தமிழகம் - மத்திய அமைச்சர் புகழாரம்

By Velmurugan sFirst Published Jan 21, 2023, 6:27 PM IST
Highlights

இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து கலாசாரங்களையும் விட மிகவும் பழமையான பண்பாட்டை தமிழகம் கொண்டுள்ளதாக கோவையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் உட்பட 2704 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர், தமிழில் வணக்கத்தை கூறி தனது உரையை தொடங்கினார். 'காந்தியவாதி மற்றும் சுவாமி விவேகானந்தரின் சீடரான டாக்டர் அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களால் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சிறப்பாக கடந்த ஏழு தசாப்தங்களாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் மற்ற கலாசாரங்களை விட பழமையான பண்பாட்டை தமிழகம் கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாசாரம் பனாரஸில் கொண்டாடப்பட்டது. பாரத பிரதமர் அங்கு திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமையும் எடுத்துரைத்தார். திருக்குறளை நாம் படித்தாலே நமது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான நல்லொழுக்கங்கள் தெரிந்துவிடும்.

அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு மிகவும் முக்கியமானது; மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

உலக நாடுகளுக்கு வழிகாட்டும் விதமாக ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. நமது கலாசாரம் நமக்காகவும், நமது குடும்பத்திற்காகவும், இந்த நாட்டிற்காகவும் மட்டுமில்லாமல் 'வாசுதேவ குடும்பகம்' என்கிற அடிப்படையில் உலகத்திற்கு பயனளிக்கக்கூடியது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய அமைச்சர், 'நடப்பு நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பின்போது பிரதமர் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அதற்கான நிதி உதவிகளையும் அறிவிக்க உள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கையின், மொழிக் கொள்கை, டிஜிட்டல் யுனிவர்சிட்டி உட்பட பல்வேறு அம்சங்களும் அமல்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் நான்கு வருடம் அல்லது மூன்று வருட காலத்திற்கான படிப்புகளை அவர்களே தேர்வு செய்யலாம். இது முழுக்க முழுக்க அவர்களது தேர்வை பொருத்தது.

சிவனாக ரங்கசாமி, முருகனாக நமச்சிவாயம்; புதுவையில் நன்றிக்கடன் செலுத்திய ஊழியர்கள்

இதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி மாநில பல்கலைக்கழகங்களுக்கு வழங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சமாக அடிப்படை கல்வியை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற முக்கிய கருத்து உள்ளது. அதன் அடிப்படையில் முதல்முறையாக 2023-24 கல்வி ஆண்டுக்கான என்.சி.ஆர்.டி புத்தகங்கள் தமிழ், தெலுங்கு, வங்காளம் உட்பட பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட உள்ளன. 

தற்போது வரை இந்தி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் மட்டுமே அச்சிடப்பட்டு வந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நாம் பல்வேறு தொழில்நுட்பங்களுக்காக வெளிநாடுகளையே நம்பியிருந்தோம். ஆனால், இன்று இந்தியா சுயமாக தொழில்நுட்பங்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே கலாசார பரிமாற்றம் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து வந்த மக்கள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் புதிய அனுபவங்களை பெற்றனர் என்றார்.

click me!